தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர் உள்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகக் கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்திற்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்
டிஜிபி அலுவலகம் 11 செ.மீ மழையும், மண்டபம், அண்ணா பல்கலை தலா 6 செ.மீ மழையும், எண்ணூர், வாலிநோக்கம், பெரம்பூர், ஆலந்தூர், ரெட்ஹில்ஸ், கும்மிடிப்பூண்டி, சோழவரம், எம்.ஜி.ஆர் நகர் தலா 4 செ.மீ மழையும், பாம்பன், வானுர், திருவள்ளூர், தாமரைப்பாக்கம், அம்பத்தூர் ராதாபுரம் தலா 3 செ.மீ மழையும் பெய்துள்ளது.