நாகப்பட்டினம்: நாகையை அடுத்த வடக்குப் பொய்கைநல்லூரில் உள்ள கோரக்கச் சித்தர் ஆசிரமத்தில் ஐப்பசி பெüர்ணமி மற்றும் பரணி விழா வெள்ளிக்கிழமை (அக். 30) தொடங்குகிறது.
நாகையை அடுத்த வடக்குப் பொய்கைநல்லூரில் உள்ள கோரக்கச் சித்தர் ஆசிரமத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி பௌர்ணமி விழா மற்றும் ஐப்பசி பரணி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டுக்கான ஐப்பசி பரணி விழா வெள்ளிக்கிழமை (அக். 30) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை (நவ. 1) நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை மதியம் கோரக்கச் சித்தர் ஜீவ சமாதி பீடத்துக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், அன்னாபிஷேகமும் நடைபெறுகின்றன.
பெüர்ணமி விழா சிறப்பு நிகழ்ச்சிகளாக வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு பேராசிரியர் மு. மணிமேகலை பங்கேற்கும் கந்த புராணம் தொடர் சொற்பொழிவும், இரவு 7 மணிக்கு கர்நாடக இசை பாடகர் ஜி. சிவசிதம்பரம் பங்கேற்கும் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
இரவு 9 மணிக்கு அகிலத்தில் அனைவரும் ஆண்டவனிடம் வேண்டுவது அளவற்ற பொருளே! நிகரற்ற அருளே! என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. திரைப்படப் பாடலாசிரியர் சினேகன் நடுவராகப் பங்கேற்கிறார்.
சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு திருவருட்பா அகவல் மற்றும் சந்திரரேகை பாராயணத்துடன் ஐப்பசி பரணி விழா தொடங்குகிறது. தொடர்ந்து, கோரக்கச் சித்தர் ஜீவசமாதி பீடத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இரவு 10 மணிக்கு திரைப்பட பின்னணி பாடகி மீனாட்சி இளையராஜா பங்கேற்கும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு , பாரம்பரிய முறைப்படி பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெறுகிறது.