தமிழ்நாடு

டிச.27-இல் திருநள்ளாற்றில் சனிப்பெயர்ச்சி விழா

DIN

காரைக்கால்:  திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் டிசம்பர் 27-ஆம் தேதி  நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி விழா தொடர்பாக அரசு அலுவலர்களுடன் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவானை சனிக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகை தருவர். சனிப்பெயர்ச்சி விழாவின்போது திருநள்ளாற்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
நிகழாண்டு வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி டிசம்பர் 27-ஆம் தேதி காலை 5.22 மணிக்கு நடைபெறவுள்ளது.
கரோனா பொது முடக்கத்தில் பல கட்ட தளர்வுகளின் அடிப்படையில் கோயில்கள் திறக்கப்பட்டு, வழிபாடுகளுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டாலும், அர்ச்சனை, பிரசாதம் வழங்குவது மற்றும் வழக்கமாக நடைபெறும் உத்ஸவங்கள் இல்லை.  அதனால் டிசம்பர் மாதம் திருநள்ளாறு கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுமா என்ற சந்தேகம் பக்தர்களிடையே நிலவி வந்தது.
இந்நிலையில்,  நிகழாண்டு சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தொடர்பாக திருநள்ளாற்றில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா தலைமையில் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட துணை ஆட்சியரும், கோயில் நிர்வாக அதிகாரியுமான எம்.  ஆதர்ஷ், சனிப்பெயர்ச்சி முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியருக்கு விளக்கினார்.
வழிபாட்டுக்கு பக்தர்களை அனுமதிப்பது, தரிசனத்துக்கு பதிவு செய்வது, வாகனங்கள் பார்க்கிங், கழிப்பறை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் இதுகுறித்து அலுவலர்கள் கூறியது:
திருநள்ளாறு கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவது உறுதி. ஆனால், பக்தர்களை  அனுமதிப்பது, டிசம்பர் மாதம் கரோனா பரவல் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். பக்தர்களை எவ்வாறு தரிசனத்துக்கு அனுமதிப்பது என்பது குறித்த அறிவிப்பை கோயில் நிர்வாகம் பின்னர் வெளியிடும் என்றனர்.
மாவட்ட துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) எஸ். பாஸ்கரன், மண்டல காவல் கண்காணிப்பாளர் ரகுநாயகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT