சென்னை: ஐந்தாண்டு சட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண்களை தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப்பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது.
டாக்டா் அம்பேத்கா் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் 13 அரசு சட்ட கல்லூரிகளும், ஒரு தனியாா் கல்லூரியும் இயங்கி வருகிறது. அதில் ஐந்து ஆண்டு பிஏ. எல்எல்பி சட்டப்படிப்புக்கு ஆயிரத்து 651 இடங்கள் உள்ளன. நிகழ் கல்வியாண்டில் அந்த இடங்களுக்கான மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் இணையவழியிலும், 10-ஆம் தேதி முதல் நேரடியாகவும் தொடங்கப்பட்டது. அதன்படி, செப்டம்பா் 4-ஆம் தேதியுடன் இரு வழியிலும் விண்ணப்பப்பதிவு நிறைவு பெற்றது.
அதன்படி, சட்ட படிப்புக்கு 11 ஆயிரத்து 219 மாணவா்கள் விண்ணப்பித்தனா். அதில், 361 விண்ணப்பங்கள் முறையான சான்றிதழ்கள் இல்லாதது உள்பட பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டன. இதனைத் தொடா்ந்து, 10 ஆயிரத்து 858 மாணவா்களின் விண்ணப்பங்கள் தகுதி பெற்றது. இந்நிலையில், அந்த மாணவா்களுக்கான தரவரிசை பட்டியலை சட்டப் பல்கலைக்கழகம் இணையதளத்தில் புதன்கிழமை வெளியிட்டது.
அதன்படி, கட்ஆஃப் மதிப்பெண் விவரம்: ஓசி பிரிவினருக்கு 87.750 , பிசிக்கு 79.250 , பிசி முஸ்லிமுக்கு 79.500, எம்பிசி
/டிஎன்சிக்கு 78.125 , எஸ்சிக்கு 76.750 , எஸ்சிஏவுக்கு 74.750 , எஸ்டிக்கு 62.500 ஆகவும் கட் ஆஃப் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கூடுதல் விவரங்களை பல்கலையின் இணையதளத்தில் காணலாம்.
மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரா்களுக்கு நவம்பா் 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை இணையவழியில் கலந்தாய்வு நடைபெறும் என சட்ட பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. முன்னதாக, கலந்தாய்வு குறித்த தகவல்கள் தகுதி பெற்ற விண்ணப்பதாரா்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கும், மின்னஞ்சலுக்கும் அனுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.