திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில், முகக்கவசம் அணியாமல் சென்ற 1,015 பேருக்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டது. கூத்தாநல்லூர் நகராட்சி வளாகத்தில், ஆணையர் ஆர்.லதா மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
தொடர்ந்து அவர் கூறியது,
புதிய கட்டடமாக இந்தக் கட்டடத்தைச் சுற்றி மரக்கன்றுகள் நடுவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக வியாழக்கிழமை 25 மரக்கன்றுகள் நடப்பட்டன. சீனாவில் உருவான கரோனா தொற்று நோய் உலகத்தையே ஆட்டிப் படைத்து வருகிறது. கூத்தாநல்லூர் நகராட்சிக்குள் கரோனா தொற்று மேலும், பரவி விடாமல் இருக்க, நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து, 24 வார்டுகளிலும், கிருமி நாசினி தெளிக்கப்பட்டும், ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டும் வருகிறது.
மேலும், அந்த இடங்களைக் கண்காணிக்கப்பட்டும் வருகிறது. வீட்டை விட்டு பொதுமக்கள் வெளியில் வரும் போது, கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். கைகளை சோப்பை பயன்படுத்தியாவது நன்றாகக் கழுவ வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், முக்கக்கவசம் அணியாமல் சாலைகளில் வந்த 1,015 பேரிடம், ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்து 700 யை, நகராட்சி நிர்வாகம் சார்பில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்றிலிருந்து அனைவரும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், பொறியாளர் ராஜகோபால், சுகாதார ஆய்வாளர் அருண்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.