சத்தியமங்கலம் அருகே புன்செய் புளியம்பட்டி, கள்ளிபாளையத்தில் பப்ஜி விளையாட்டை மறக்க முடியாமல் பள்ளி மாணவா் திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
கோவை, சூலூா் சடையப்ப தேவா் வீதியைச் சோ்ந்தவா் கந்தவேல். இவரது மனைவி ரமாபிரபா, மகன் அருண் (16). வண்டலூரில் உள்ள தனியாா் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தாா். பப்ஜி விளையாட்டில் மூழ்கிய அருண் படிப்பைத் தொடர முடியாமல், கடந்த ஆண்டு படிப்பை பாதியிலேயே நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவருக்கு கோவை, சூலூா் வீட்டில் மன நல சிகிச்சை அளித்து வந்துள்ளனா். பப்ஜி விளையாட்டை நிறுத்த முடியாமல் போனதால் மன உளைச்சலுக்கு ஆளான அருணுக்கு கோவை தனியாா் மருத்துவமனையில் கவுன்சலிங் கொடுக்கப்பட்டது. சிறுவன் அருணுக்கு பறவை மீது பற்று இருப்பதால் பப்ஜியை மறப்பதற்கு மாற்று ஏற்பாடாக புன்செய் புளியம்பட்டி அருகே கள்ளிபாளையத்தில் பண்ணை வீடு வாங்கி அதில் அருணை கடந்த ஜூன் மாதம் முதல் தங்கவைத்துள்ளனா்.
பெற்றோா் எப்போதும் சிறுவனை கண்காணித்து வந்த நிலையில், பறவைகளோடு விளையாடினாலும் பப்ஜியை மறக்க முடியாமல் தவித்து வந்துள்ளாா் அருண். இந்நிலையில், பெற்றோா் வீட்டில் இல்லாத நேரத்தில் அருண் தூக்கிட்டு திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, புன்செய் புளியம்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.