தேவர் ஜயந்தியையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் வரும் வெள்ளிக்கிழமை (அக்.30) தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
சுதந்திரப் போராட்ட வீரரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113- ஆவது ஜயந்தி மற்றும் 58 -ஆவது குருபூஜை புதன்கிழமை (அக்.28) காலை பூஜைகளுடன் தொடங்குகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் ஆன்மிக விழா, அரசியல் மற்றும் குருபூஜை என 3 நாள்களுக்கு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ஜயந்தி விழாவின் மூன்றாம் நாளான அக். 30 -ஆம் தேதி குரு பூஜையன்று காலை 8.45 மணியளவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.
அவர்களுடன் தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன் (வனத்துறை), செல்லூர் கே.ராஜு (கூட்டுறவுத்துறை), ஆர்.காமராஜ் (உணவுத்துறை), ஓ.எஸ்.மணியன் (கைத்தறி மற்றும் துணிநூல்துறை), சி.விஜயபாஸ்கர் (சுகாதாரத் துறை), ஆர்.பி.உதயகுமார் (வருவாய்த் துறை) மற்றும் க.பாஸ்கரன் (கதர் மற்றும் கிராமத் தொழில்கள்) ஆகியோரும் பங்கேற்கின்றனர்.