விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் குடும்பத்தகராறு காரணமாக புதன்கிழமை பெண் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியைச் சேர்ந்தவர் காளிமுத்து(39). இவரது மனைவி முத்துமாரி(36). ஆட்டோ ஓட்டுநரான காளிமுத்துவிற்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுமெனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் புதன்கிழமை காலை உணவு உண்டபின் காளிமுத்து வழக்கமான தனது ஆட்டோ ஓட்டும் பணிக்குக் கிளம்பிச் சென்று விட்டாராம். பின்னர் சிறிது நேரத்தில் உள்பக்கமாகப் பூட்டியிருந்த நிலையில் காளிமுத்துவின் வீட்டிலிருந்து அதிகளவில் புகை கிளம்பியதாம். இதனால் தீ விபத்து என நினைத்து அக்கம்பக்கத்தினர்,அவ்வீட்டின் ஜன்னல் வழியே பார்த்தபோதுதான் உள்ளே முத்துமாரி தீயில் கருகிப் பிணமாகக் கிடப்பது தெரிய வந்தது.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் முத்துமாரியின் உடலை மீட்டு அருப்புக்கோட்டை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதுதொடர்பாக வழக்குப் பதிந்த நகர் காவல்துறையினர் முத்துமாரியின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.