தேசியக் கொடியை அவமதித்ததாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் மீதான புகார் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் முகப்பேரை சேர்ந்த. குகேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், சுதந்திர தினத்தன்று, தியாகராய நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் எல்.முருகன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
இதனையடுத்து, பாரதிய ஜனதா கட்சிக் கொடி ஏற்றக்கூடிய கொடிக்கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி அவமரியாதை செய்ததாக பாஜக தலைவர் எல்.முருகன், வானதி சீனிவாசன் மற்றும் இல.கணேசன் ஆகியோருக்கு எதிராக அண்ணா நகர் காவல் நிலையத்தில் கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி புகார் அளித்துள்ளேன்.
பாரதிய ஜனதா கட்சிக் கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றியது தேசியக் கொடி விதிகள் மற்றும் தேசிய கௌரவ பாதுகாப்பு சட்டத்தின் படி குற்றமாகும். எனவே எல்.முருகன் உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.