வாழப்பாடி அரசு மருத்துவமனையுடன் அரிமா சங்கங்கள் இணைந்து பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
நாடு முழுவதும் மார்பகப் புற்றுநோய் குறித்து பெண்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அக்டோபர் மாதம் முழுவதும், 'பிங்டோபர்' என்ற புதிய அடைமொழியுடன், அந்தந்தப் பகுதியிலுள்ள தன்னார்வ இயக்கங்களுடன் இணைந்து, அரசு மருத்துவமனைகள் வாயிலாக விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்திட மத்திய, மாநில சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதனையடுத்து, வாழப்பாடி அரிமா சங்கம் மற்றும் அன்னை அரிமா சங்கத்துடன் இணைந்து, வாழப்பாடி அரசு மருத்துவமனைகள் சார்பில், வாழப்பாடியில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது. வாழப்பாடி அரிமா அரங்கத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கு, வாழப்பாடி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ராதிகா தலைமை வகித்தார். வாழப்பாடி அரிமா சங்கப்பட்டய தலைவர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். அரிமா சங்கத் தலைவர் ஜவஹர் வரவேற்றார்.
மார்பக புற்றுநோய் தடுப்பு, சுயபரிசோதனை, இலவச சிகிச்சை முறைகள் குறித்து, பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம், பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ஜெயசுதா, மருத்துவர்கள் பிரபாவதி மோதிலால், திவ்யபாரதி, ஜெயஸ்ரீ, வாழப்பாடி அரசு சித்த மருத்துவர் செந்தில் குமார் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
இக்கருத்தரங்கில் வாழப்பாடி அன்னை அரிமா சங்க நிர்வாகிகள் ஜெ.புஷ்பா, செயலர் சுதாபிரபு, பொருளாளர் தேன்மொழி, சில.எம்கோ மற்றும் வாழப்பாடி உதய விவேகா பாராமெடிக்கல் பயிற்சி மாணவிகள் கலந்து கொண்டனர். நிறைவாக, வாழப்பாடி அரிமா சங்க பொருளாளர் பன்னீர்செல்வன் நன்றி கூறினார்.