பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் 10 இடங்களில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்ட ஏஐடியூசி சுகாதார தொழிலாளர்கள் சங்கம் சார்பில் குமரன் சிலை, கருவம்பாளையம், பங்களா பேருந்து நிறுத்தம், தென்னம்பாளையம், வீரபாண்டி பிரிவு உள்ளிட்ட 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், பங்கேற்ற தொழிற்சங்கத்தினர் கூறியதாவது:
கரோனா காலத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தபடி சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். சுகாதார தொழிலாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள தற்காலிகப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.ரவி, ஏஐடியூசி சுகாதார தொழிலாளர் சங்க செயலாளர் பி.ஆர்.நடராஜன், பொருளாளர் ஏ.ஜெகநாதன், ஏஐடியூசி மாவட்ட பொதுச்செயலாளர் என்.சேகர், மாவட்டத் தலைவர் வி.பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.