மதுக்கரை: கோவை, பேரூர் அருகே ஒத்திகையில் ஈடுபட்ட மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினரின் (சிஐஎஸ்எஃப்) வாகனம் திங்கள்கிழமை சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஆர்எஸ்எஸ் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவை, சாடிவயல் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் மோகன் பாகவத் விமானம் மூலம் கோவைக்கு திங்கள்கிழமை வந்தார். முன்னதாக கோவை விமான நிலையத்தில் இருந்து சாடிவயல் பகுதியில் அவர் தங்கும் இடத்துக்கு அழைத்துச் செல்வதற்காக 7 பேர் கொண்ட மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
பேரூர், பச்சாபாளையம் அருகே வந்தபோது முன்னால் சென்ற இருசக்கர வாகன ஓட்டி திடீரென திரும்பியதால் அவர் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் இடது பக்கமாக காரை திருப்பினார்.
அப்போது அருகில் உள்ள குழியில் இறங்கி பாதுகாப்பு வாகனம் தலைகீழாகக் கவிழ்ந்தது.
இதனைத் தொடர்ந்து காரில் சிக்கிய பாதுகாப்புப் படையினரைப் பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
இதனைத் தொடர்ந்து மாற்று வாகனத்தில் போலீஸார் விமான நிலையம் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.