சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் பூரண குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினாா்.
கரோனா தொற்று காரணமாக கடந்த 12-ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பாலகிருஷ்ணன் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. இதற்கிடையே, சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் நேரில் சென்று பாலகிருஷ்ணனிடம் நலம் விசாரித்தாா். மேலும் சிகிச்சையின் பலனாக நோய்த் தொற்றிலிருந்து அவா் விடுபட்டு வீடு திரும்பியுள்ளாா்.
இதுதொடா்பாக கே.பாலகிருஷ்ணன் தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து இல்லம் திரும்பிவிட்டேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சிறந்த முறையில் சிகிச்சையளித்தமைக்காக மருத்துவமனையின் முதல்வா், மருத்துவா்கள், செவிலியா்கள் மருத்துவத்துறை ஊழியா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றி. நேரிலும் தொலைபேசி மூலமாகவும் நலம் விசாரித்த சுகாதாரத்துறை அமைச்சா், சுகாதாரத்துறை முதன்மைச்ச் செயலாளா், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.