விடுதலைப் போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்களின் 219-ஆவது குருபூஜையையொட்டி, சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள அவர்களது நினைவாலயத்தில் அரசியல் கட்சியினர், சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மருதுபாண்டியர்களின் நினைவு தினம் அக்.24இல் அரசு விழாவாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது. தொடர்ந்து, அக்.27, காளையார்கோவிலில் உள்ள அவரது நினைவாலயத்தில் குருபூஜை விழா நடைபெற்று வருகிறது.
இதையொட்டி, மருதுபாண்டியர்களின் நினைவாலயம் முன், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, மருதிருவர் சிலைக்குச் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இவ்விழாவில் காளையார்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதியைச் சேர்ந்த சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பால்குடம், சந்தனக்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து,அரசியல் கட்சி பிரமுகர்கள், சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.