சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைக் கண்டித்து சிதம்பரத்தில் பாஜக சார்பில் நடைபெறுவதாகக் கூறப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் சென்ற நடிகை குஷ்பு சென்னைக்கு அருகே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிர் அணி சிதம்பரத்தில் நடத்தும் போராட்டத்திற்கு காவல்துறையினர் தடை விதித்த நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்புவை கிழக்குக் கடற்கரைச் சாலை, முட்டுக்காட்டில் காவல்துறையினர் கைது செய்தனர்.
சிதம்பரத்தில் நடிகை குஷ்பு பங்கேற்கவிருந்த பாஜக ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது. இந்தநிலையில், அதில் பங்கேற்கச் சென்ற குஷ்பு கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகச் சென்ற போது தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுமதி மறுக்கப்பட்டாலும் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் காவல்துறையினர் முன்னெச்சரிக்கையாக இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
தான் கைது செய்யப்பட்டு காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுவது குறித்து குஷ்பு சுட்டுரைப் பக்கத்தில் புகைப்படத்துடன் தகவல் பகிர்ந்துள்ளார்.