மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக்கூடாது என தமிழக ஆளுநருக்கு பாஜக கல்வி பிரிவு மாநிலச் செயலாளர் நந்தகுமார் கடிதம் எழுதியுள்ளார்.
மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில் ஆளுநர் விரைந்து சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
தமிழக அரசும் இதுகுறித்து ஆளுநரிடம் வலியுறுத்தி வருகிறது. முதலில் அமைச்சர்கள், பின்னர் முதல்வர் பழனிசாமியே நேரில் சென்று மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, பாஜக கல்வி பிரிவு மாநிலச் செயலாளர் தமிழக ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில், மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளார். இது எதிர்க்கட்சிகள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.