விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்தி நகர் அருள்மிகு சாய்பாபா கோவிலில் நவராத்திரி திருநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பு வழிபாட்டுடன் அருள்மிகு சாய்பாபா பல்லக்கு பவனி நடைபெற்றது.
அருப்புக்கோட்டை காந்தி நகர் அருள்மிகு சாய்பாபா கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய முப்பெருந்தேவியர் உருவப்படங்களை அமைத்து, வண்ண மலர்களால் அலங்கரித்துச் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனையடுத்து அருள்மிகு சாய்பாபாவிற்கு மாலை ஆரத்தி, தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து சிறப்புப் பல்லக்கு பவனி ஏற்பாடானது. அப்போது பெண் பக்தர்கள் மட்டும் பல்லக்கினைச் சுமந்திட, கோவிலின் வெளிப்பிரகாரத்தில் அருள்மிகு சாய்பாபா பல்லக்கு உலா நடைபெற்றது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஜெய் சாய் ராம் எனப் பக்தி முழக்கம் எழுப்பி வழிபட்டனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.