அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாரதி நகர் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக நகரச் செயலாளர் சக்திவேல் பாண்டியன் தலைமையில், நகர, ஒன்றிய தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் ஞயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு நடைபெற்றது.
அருப்புக்கோட்டை பாரதி நகர் தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அதிமுக நகரச் செயலாளர் சக்திவேல் பாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் யோகா வாசுதேவன் முன்னிலை வகித்தார்.
அப்போது சக்திவேல் பாண்டியன் பேசுகையில், அதிமுகவானது முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரால் சிறப்பாக வளர்ந்து இன்று முழு முதல் முன்னணிக் கட்சியாக வானுயர வளர்ந்து நிற்கிறது.
இங்கு உழைப்பவர்க்கே முன்னுரிமை. எனவே, அருப்புக்கோட்டை தொகுதி அதிமுக, நகர, வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியத் தகவல் தொழில் நுட்பப் பிரிவு நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாகப் பணியாற்றி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றியைப் பெற உழைக்க வேண்டும் எனப் பேசினார்.
உடன் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நகரச் செயலாளர் பிரகாஷ் கண்ணன், வடக்கு ஒன்றியச் செயலாளர் முத்து வைரவன், தெற்கு ஒன்றியச் செயலாளர் மாரீஸ்வரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் நேரில் கலந்து கொண்டனர்.