சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதோடு, இன்றுடன் வெப்பச் சலன மழை விடைபெறுகிறது. அடுத்த வாரத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்க உள்ளது.
மழை பற்றிய பதிவுகளை முகநூல் மூலம் பதிவிட்டு வரும் தமிழ்நாடு வெதர்மேன் இது குறித்து தெரிவித்துள்ளார்.
அதில், இன்றுடன் வெப்பச் சலன மழை விடைபெறுகிறது. சென்னையில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, இன்றைய வெப்பச் சலன மழைக்கு விடை கொடுத்துவிட்டு, இன்னும் ஓரிரு நாள்களில் தொடங்கவிருக்கும் வடகிழக்குப் பருவ மழையை வரவேற்கத் தயாராகுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
அதேவேளையில் சென்னையில் இன்று ஒரு சில இடங்களிலும், புறநகர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது.
பள்ளிக்கரணை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், சிட்லப்பாக்கம், ராயபுரம், பெரும்பாக்கம், அடையாறு, மாம்பாக்கம், கீழ்க்கட்டளை, தாம்பரம், தாழம்பூர், அகரம், கிழக்குக் கடற்கரைச் சாலை, திருமுடிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது.
பொதுவாகவே சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் லேசான தூறல் விழுந்தது.