சென்னை: சிறப்பு ஊக்கத் தொகை பெறும் மாணவா்களின் பெயா்ப் பட்டியலை உடனடியாக அனுப்பி வைக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்ககம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு
அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிற்றலை தவிா்க்கும் வகையில் கடந்த 2011-ஆம் கல்வியாண்டு முதல் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நிகழாண்டு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ஏதுவாக 10, 11, 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்களின் எண்ணிக்கை விவரங்களை இயக்குநரகத்துக்கு மின்னஞ்சல் மூலமாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.