7.5% உள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தருமாறு ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக பணியாளர், நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு இன்று பதிலளித்துப் பேசினார்.
அப்போது அவர், 7.5% உள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தருமாறு ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், மசோதாவுக்கு ஒப்புதல் தருமாறு ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது என்றார். அதேநேரத்தில் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பின்னரே மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும் என்று கூறிய அவர், 'எதிர்க்கட்சித் தலைவர், ஆளுநருக்கு கடிதம் எழுதியதில் எந்த தவறும் இல்லை, ஆனால், ஒப்புதல் கிடைத்தபிறகு தங்கள் போராட்டத்தினால்தான் ஆளுநர் ஒப்புதல் அளித்தார் என்று ஸ்டாலின் பெயர் எடுக்க முயற்சிக்கிறார்' எனத் தெரிவித்தார்.
பின்னர் பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட் குறித்து, 'வன்னியர் சமூகத்துக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற பாமகவின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும்; அது தொடர்பாக அரசு முடிவெடுக்கும்' என்று பதிலளித்தார்.
முன்னதாக, மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் இன்னும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.
இது தொடர்பான வழக்கிலும், 'ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்வரை தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு நடைபெறாது' என தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், ஆளுநர் இந்த மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதேபோன்று, அதிமுக அமைச்சர்களும், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பதில் அளித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எழுதியுள்ள கடிதத்தில், 7.5% இட ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க 3 அல்லது 4 வாரங்கள் தேவைப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.