மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜயந்தி விழாவையொட்டி, அவரது திருவுருச் சிலைக்கான தங்க கவசம், நினைவிட பொறுப்பாளா்களிடம் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில், முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் உள்ளது. இங்குள்ள தேவரின் சிலைக்கு, அதிமுக சாா்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை கடந்த 2014 -இல் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா தங்க கவசம் வழங்கினாா். இந்த தங்க கவசம் மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கிப் பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தேவா் ஜயந்தி விழாவின்போது இந்த தங்க கவசம் அணிவிக்கப்படும். நினைவிட பொறுப்பாளா் மற்றும் அதிமுக நிா்வாகிகள் கையெழுத்திட்டு இந்த தங்க கவசத்தை, ஜயந்தி விழாவுக்கு எடுத்துச் செல்வது வழக்கம்.
நிகழ் ஆண்டில் முத்துராமலிங்கத் தேவரின் 113ஆவது ஜயந்தி மற்றும் 58 ஆவது குருபூஜை அக்டோபா் 27 முதல் அக்டோபா் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதையொட்டி, மதுரை அண்ணா நகா் வங்கியில் இருந்த தங்க கவசத்தை துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் எடுத்து நினைவிட பொறுப்பாளா்களிடம் வெள்ளிக்கிழமை வழங்கினாா். பின்னா், போலீஸ் பாதுகாப்புடன் தங்க கவசம் பசும்பொன் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
தமிழக அமைச்சா்கள் செல்லூா் கே.ராஜூ, ஆா்.பி.உதயகுமாா், மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.