நாமக்கல்: நாமக்கல்- திருச்சி சாலையில் வியாழக்கிழமை அதிகாலை இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டுநர் ஒருவர் பலியானார்.
நாமக்கல் முதல் திருச்சி வரையிலான சாலை இரு வழிச்சாலையாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.
கனரக வாகனங்கள் குறிப்பாக டிரெய்லர், கண்டெய்னர் மற்றும் மணல் லாரிகள் பாரம் ஏற்றிக் கொண்டு அதிக அளவில் சென்று வருகின்றன. மேலும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையாகவும் இச்சாலை உள்ளது.
இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை நாமக்கல்லில் இருந்து முசிறி நோக்கி விறகு கட்டைகள் ஏற்றிச்சென்ற லாரியும், திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த மற்றொரு லாரியும், நாமக்கல்-திருச்சி சாலை மேம்பாலத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில், ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் பலத்த காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து நாமக்கல் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.