விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பந்தல்குடி அருகே உள்ள சாய்பாபா கோவிலில் வியாழக்கிழமை நவராத்திரி 6ம் நாள் விழாவை முன்னிட்டு கொலு முன்பாக மந்திரங்கள் சொல்லி சாய்பாபாவை பக்தர்கள் வழிபட்டனர்.
பந்தல்குடி சேதுராஜபுரத்தை அடுத்துள்ள சாய்பாபா கோவிலில் நவராத்திரி விழா 1ம் நாளை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை 100க்கு மேற்பட்ட பொம்மைகள், தெய்வ உருவ பொம்மைகள் அமைக்கப்பட்டு கொலு அமைத்து சிறப்பு வழிபாடு தொடங்கியது. இதன்படி வியாழக்கிழமை நவராத்திரி 6ம் திருநாளை முன்னிட்டு காலை 11 மணிக்கு கொலுவிற்கு மந்திரங்கள் சொல்லி தீப, தூப ஆராதனைகளுடன் பெண்கள் வழிபட்டனர்.
அதனைத் தொடர்ந்து அருள்மிகு சாய்பாபாவிற்கு நடைபெற்ற நண்பகல் ஆரத்தியில் இசைக்கப்பட்ட சிறப்பு வழிபாட்டுப் பாடல்களுடன், பக்தர்களும் இசைந்து பாடியபடி வழிபாடு நடத்தினர். உடன் தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றுச் சிறப்பு அலங்காரத்தில் சாய்பாபா பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அப்போது பல்வேறு வித மலர்கள், மலர்மாலைகள், உணவுப் பண்டங்களை சாய்பாபாவிற்குப் படைத்த பக்தர்கள், பக்தியுடன் வேண்டி வணங்கினர். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிறுவனரும், நிர்வாகியுமான சுந்தரமூர்த்தி செய்திருந்தார். நிறைவாக, பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது.