ஓமலூர் அருகேயுள்ள உள்பட்ட மூன்று ஆதிதிராவிடர் காலனிகளில் சுமார் ரூ.90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட பணிகளை ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் தொடங்கி வைத்தார்.
தற்போது இரண்டு மாதங்களாக ஓமலூர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் இங்கு பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் வீதி சாலைகள் பழுதடைந்து காணப்பட்டது. இதை தொடர்ந்து பொதுமக்களின் சிரமத்தை போக்க தமிழக முதல்வர் ஆணைப்படி, சேலம் மாவட்டம், ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மூன்று ஊராட்சிகளில் சுமார் 90லட்சம் மதிப்பிலான சாலைகள் அமைக்கும் பணிகளை ஓமலூர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதில், சக்கரைசெட்டியப்பட்டியில் பேவர் பிளாக் சாலையும், பொட்டியபுரம் மற்றும் தாத்தியம்பட்டி ஆகிய ஆதிதிராவிடர் காலனியில் காங்க்ரீட் சாலையும் அமைக்க பணிகள் தொடங்கியது. தொடர்ந்து பூஜை செய்ய வந்த சட்டப்பேரவை உறுப்பினருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.
வரவேற்பை பெற்றுக்கொண்ட சட்டப்பேரவை உறுப்பினர் பூமிபூஜையில் கலந்து கொண்ட அனைத்து பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கினார். தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பித்து உடனடியாக தீர்வு காண அரசு அலுவலர்களிடம் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், தங்கவேல் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.