ஸ்ரீவில்லிபுத்தூரில் 17 ஆண்டுகள் சிறை சென்று வந்த 60 வயது முதியவர் சடலம் மரத்தில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது. இது கொலையா ? அல்லது தற்கொலையா ? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மாலைப்பட்டி தெருவைச் சேர்ந்தவர் 60 வயதுடைய வண்டு என்ற மாடசாமி. இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவரது இரு மகள்களும் திருமணமாகி கணவருடன் வெவ்வேறு ஊரில் வாழ்ந்து வருகிறார்கள். தற்போது மாடசாமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது மகள்கள் கவனிக்காததால் மாலைபட்டியில் அவரது அண்ணன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மனமுடைந்த அவர் நேற்று நள்ளிரவில் யாரும் இல்லாத நேரத்தில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது. ஏற்கனவே மாடசாமி தனது மனைவி சோமு மீது சந்தேகப்பட்டு கழுத்தறுத்து கொலை செய்து 17 ஆண்டுகள் சிறை சென்று வந்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல்துறையினர் இறந்த வண்டு என்ற மாடசாமியின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து கொலையா ? தற்கொலையா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.