அவிநாசி: அவிநாசி அருகே பெரியநாதம்பாளையத்தில் நூற்பாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமாயின.
அவிநாசி அருகே பெரியநாதம்பாளையம் பகுதியில் வேஸ்ட் பனியன் துணிகளை பஞ்சாக மாற்றும் நூற்பாலை வைத்து நடத்தி வருபவர் கோபி எலத்தூர் பகுதியைச் சேர்ந்த மசிரியப்பன் மகன் மயில்சாமி(39). இந்நிலையில் இந்த நூற்பாலையில் வியாழக்கிழமை 15-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களுடன் பணி நடைபெற்று வந்துள்ளது.
அப்போது திடீரென இயந்திரத்தில் எதிர்பாராக விதமாக ஏற்பட்ட மின்கசிவு காரணமாக குடோனில் அடக்கி வைத்திருந்த பஞ்சு மூட்டைகள், இயந்திரங்கள் உள்ளிட்டவை தீப்பிடித்து எரியத் தொடங்கின.
தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த அவிநாசி, திருப்பூர் வடக்கு தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் ஹலோ பிளாக்குடன் சிமெண்ட் சீட் பொருத்தப்பட்டிருந்ததால், கட்டடங்கள் கீழே விழுந்து விடாமல் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் நூற்பாலையில் இருந்த இயந்திரங்கள், பஞ்சு மூட்டைகள் என பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின.
இதில் அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் உயிர் தப்பினர். இது குறித்து அவிநாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.