மன்னார்குடி: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் ஒரு நெல்மணி அளவுகூட மிச்சம் வைக்காமல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் என்றார் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கீழப்பாலம், தளிக்கோட்டை, மேலநெம்மேலி ஆகிய இடங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட பின்னர், தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் அளித்த பேட்டி:
தமிழகத்தில் வரலாற்று சாதனையாக கடந்த ஆண்டு காரீப் பருவத்தில் 32.41 லட்சம் மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
இதே பருவத்தில் நிகழாண்டு அக்டோபர் 1 முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இன்றுவரை 21 நாள்களில் 65 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு மீண்டும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. முறையாக நெல் கொள்முதல் நடைபெறவில்லை என குறை கூறுபவர்கள் ஆட்சியில் கூட, 21 நாள்களில் 6 லட்சம் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 3.55 லட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளது. இதில், 3 லட்சத்து 15ஆயிரம் ஏக்கர் பரப்பில் அறுவடைப் பணிகள் முடிவடைந்துள்ளன.
தற்போது 17 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற சூழல் இருந்தாலும். கூடுதல் ஈரப்பதத்தோடு விவசாயிகள் நெல்லை கொண்டு வந்தாலும், கொள்முதல் செய்ய வேண்டும் என கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாள்தோறும் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அன்றைய தினமே குடோன்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் அனைத்து லாரிகளும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கின்றன.
குறுவை சாகுபடி செய்திருக்கும் விவசாயிகள் நெல் கொள்முதல் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை. விளைவிக்கப்பட்ட ஒரு நெல்மணி அளவுகூட மிச்சம் வைக்காமல் அனைத்தும் கொள்முதல் செய்யப்படும் என்றார் அமைச்சர் காமராஜ்.
முன்னதாக, கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் மற்றும் எடை ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும், அங்கிருந்த விவசாயிகளிடம் கொள்முதலில் ஏதேனும் குறைபாடு உள்ளதா எனக் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது, தமிழ்நாடு கூட்டுறவு மற்றும் உணவுத்துறை முதன்மைச் செயலர் தயானந்தா கட்டாரியா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநர் எம். சுதாதேவி, மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த், பொது மேலாளர்(வாணிபம்) காளிதாஸ், முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஒரத்தநாட்டிலும் ஆய்வு
தஞ்சாவூர் மாவட்டம், தென்னமநாட்டிலுள்ள அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்திலும் புதன்கிழமை அமைச்சர் ஆர்.காமராஜ் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் குறுவை அறுவடை 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. எஞ்சிய இடங்களில் அறுவடைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதுவும் முழுமையாக கொள்முதல் செய்யப்படும் என்றார் அமைச்சர்
காமராஜ்.