களியக்காவிளை: கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை வழி லாரியில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 16 டன் ரேஷன் அரிசியை போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
களியக்காவிளை காவல் நிலைய ஆய்வாளர் எழிலரசி, உதவி ஆய்வாளர் (பயிற்சி) கார்த்திகேயன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பால்மணி, செலின்குமார் உள்ளிட்டோர் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கேரளம் நோக்கி வந்த கேரள பதிவெண் கொண்ட லாரியை நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்தனர். ஆவணத்தில் உப்பு மூட்டைகளை கேரளத்துக்கு ஏற்றிச் செல்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இருப்பினும் காவலர்கள் சந்தேகத்தின் பேரில் லாரியை சோதனை செய்த போது அதில் பாலித்தீன் சாக்கு மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததும் அவை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.
லாரியையும் அதிலிருந்த 16 டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்த போலீஸார் அவற்றை காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிந்த களியக்காவிளை காவல்கள் லாரி ஓட்டுநர் மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் விஜில் (29) என்பவரை கைது செய்தனர்.
தொடர்ந்து லாரி ஓட்டுநரிடம் மேற்கொண்ட விசாரணையில் ரேஷன் அரிசி தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து ஏற்றி கேரளத்துக்கு கொண்டு செல்லப்பட இருந்ததாக தெரிவித்தார். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.