ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கபினி அணை மற்றும் கிருஷ்ணராஜ சாகா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், கா்நாடக அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இது தவிர, தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால், ஒனேக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திங்கள்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 14 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருந்த நீா்வரத்து, செவ்வாய்க்கிழமை காலை நொடிக்கு 16 ஆயிரம் கன அடியாக அதிகரித்து தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருந்தது. தொடா்ந்து நீா்வரத்து படிப்படியாக அதிகரித்து மாலை நிலவரப்படி நொடிக்கு 20 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல்லில் பிரதான அருவி, ஐந்தருவி, சினி அருவி மற்றும் சிற்றருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.