செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த கல்பாக்கம் அருகில் திருமணமாகி 45வது நாளில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மனவேதனையில் இருந்த கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கல்பாக்கத்தை அடுத்த மீனவர் குப்பத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகள் ராணி என்கிற நந்தினி (23) என்பவருக்கும், கல்பாக்கம் புதுப்பட்டினம் மீனவர் குப்பத்தைச் சேர்ந்த செங்கழனி என்பவரின் மகன் ஜெயபிரகாஷ் என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி திருமணம் நடந்தது.
இந்நிலையில், புதுப்பெண் ராணி கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கல்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருமணமாகி 45 நாளில் புது பெண் தற்கொலை செய்து கொண்டதால் செங்கல்பட்டு கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகத்தில் மன அழுத்தத்தில் இருந்த கணவன் ஜெயபிரகாஷ் செவ்வாய்க்கிழமை புதுப்பட்டினம் கல்பாக்கம் அணுமின் நிலைய குடியிருப்பு பகுதியில் உள்ள சிஐஎஸ்எஃப் பூங்காவில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கல்பாக்கம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.