தமிழ்நாடு

புலம் பெயர்ந்து திரும்பிய திறன்பெற்ற இளைஞர்களுக்கு ரூ.2.20 கோடி தொழில் கடன்

DIN

திருவள்ளூர்: புலம்பெயர்ந்து திரும்பிய திறன் பெற்ற இளைஞர்கள் தொழில் தொடங்கவும், அதேபோல் உற்பத்தியாளர் குழுக்கள், தொழில் மகளிர் குழுக்கள் ஆகியோர் தொழில் செய்யும் வகையில் ஊரக புத்தாக்கத் திட்டம் மூலம் கரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்பு ரூ. 2.20 கோடிக்கான காசோலைகளை ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் சார்பில் கரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்புத் திட்டம் மூலம் புலம் பெயர்ந்து திரும்பிய திறன் பெற்ற இளைஞர்கள், உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் தொழில் குழுக்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்து பேசுகையில், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் என்பது சர்வதேச வங்கி நிதி உதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் தொடங்கப்பட்ட ஒரு தனித்துவம் வாய்ந்த திட்டமாகும். திருவள்ளுர் மாவட்டத்தில் மீஞ்சூர், சோழவரம், கும்மிடிப்பூண்டி மற்றும் கடம்பத்தூர் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் கரோனா நோய்த்தொற்று காரணமாக தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ள தொழில் முனைவோர்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர்கள் ஆகியோர்களின் தொழில்கள் மற்றும் வாழ்வாதாரம் புத்துயிர் பெறும் நோக்கத்தில் கரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்புத் திட்டம் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் புலன்பெற்ற தொழில் திறன் பெற்ற இளைஞர்கள், உற்பத்தியாளர் மற்றும் தொழில்குழுக்களுக்கு ரூ.2.20 கோடி வரையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து புலம் பெயர்ந்து திரும்பிய திறன் பெற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க 90 பேருக்கு தலா ரூ.1 லட்சமும், 79 உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் 8 தொழில் குழுக்களுக்கு மூலதன மானியம் ரூ. 1.30 கோடிக்கான நிதியுதவி தொகுப்பு என மொத்தம் ரூ.2.20 கோடிக்கான நிதி உதவிகளுக்கான காசோலைகளை அவர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட செயல் அலுவலர் த.முருகன், செயல் அலுவலர்கள், இளம் வல்லுநர், வட்டார அணித் தலைவர்கள் மற்றும் திட்ட செயலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

SCROLL FOR NEXT