திருவள்ளூர்: காவலர்கள் வீர வணக்க நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள நினைவுத் தூணுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தன் 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கடந்த 1959-இல் லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படைப்பிரிவைச் சேர்ந்த காவலர்கள் உயிரிழந்தனர். அதேபோல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பணியின்போது 292 பேர் உயிர் நீத்தனர்.
இவர்களின் நினைவாக அக்.21ஆம் நாளை ஒவ்வொரு ஆண்டுதோறும் காவல்துறையினர் வீரவணக்க நாளாக அனுசரித்து வருகின்றனர்.
இதையொட்டி திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாக மைதானத்தில் வீர வணக்க நாள் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தன் அந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்ததும், காவல்துறையினர் 63 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து வீரமரணம் அடைந்தவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியின்போது கரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று பல்வேறு உதவிகளை வழங்கிய ஆயுதப்படை காவலர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை எஸ்.பி. வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் காவல்துறை உயர் அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.