சீர்காழி: சீர்காழி நகர அனைத்து வணிகர்கள் நலச் சங்க கூட்டம், அச்சங்கத்தின் தலைவர் பாபு. விஜயன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
சீர்காழி நகரில் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் போடப்படும் சிறப்பு சாலையோரக் கடைகளால், தற்போது கரோனா நோய்த் தொற்று பரவல் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டும் பொதுமக்கள் கூடுவதைக் கட்டுப்படுத்தவும், நகரில் உள்ள அனைத்து வணிகர்களுக்கும், ஏற்பட்டு வரும் இழப்பீடுகளை தவிர்த்திடவும்,
தீபாவளி சிறப்பு சாலையோரக் கடைகள் போடுவதையும், வாகனத்தில் ஒலி பெருக்கிகள் மூலம் வியாபாரம் விற்பனை செய்வதையும் தடைவிதிக்க வேண்டுமென்று சீர்காழி நகர வணிகர்கள் விடுத்த கோரிக்கைகளை பரிசீலித்து, சீர்காழி நகர அனைத்து வணிகர்கள் நலச் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது.
தீபாவளி பண்டிகையயை முன்னிட்டு சீர்காழி நகர அனைத்து வணிகர்களுக்கும் போதுமான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தி தருமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து, தீர்மானம் நிறைவேற்றினர். இந்த தீர்மானம் தொடர்பாக நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன்.பி.நாயரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.