தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால், மாணவர்கள் மகிழ்ச்சி அடையும் முடிவை அறிவிப்பார் என்று பாஜக மாநில துணைத் தலைவரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான கே.அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை மேற்குத் தாம்பரத்தில் தன்வந்த்ராலயா ஆயுர்வேத மருத்துவமனையை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து அவர் பேசியது:
கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் இட ஒதுக்கீடு வழங்கினால் பாஜக ஆதரிக்கும் என்று தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஏற்கெனவே அறிவித்து இருந்தார். அந்த வகையில் தமிழகத்தில் அரசுப் பள்ளி ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதை பாஜகவும் ஆதரிக்கிறது. உள் ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநர் நல்ல முடிவை அறிவிப்பார். அவரது முடிவு தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆதரவான முடிவாக இருக்கும்.
கரோனா நோய்த் தடுப்பில் முக்கிய பங்கு வகித்த சித்த, ஆயுர்வேத மருத்துவத்தின் மகத்துவத்தை மக்கள் நன்கு உணர்ந்து இருக்கிறார்கள். ஆங்கில மருத்துவத்துடன் சித்த, ஆயுர்வேத மருத்துவத்தை இணைப்பு மருத்துவமாகப் பயன்படுத்தும் முறையை இந்தியா முழுக்க செயல்படுத்த மத்தியஅரசு முன்வர வேண்டும் என்ற அனுபவமிக்க சித்த மருத்துவர் டாக்டர் பி.ஜெயப்பிரகாஷின் நியாயமான கோரிக்கையை மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன் என்றார் அவர்.
மத்திய ஆயுர்வேத மருத்துவக் கவுன்சில் முன்னாள் தலைவர் டாக்டர் வனிதா முரளிகுமார், ஸ்ரீசாய்ராம் கல்விக் குழுமத் தலைவர் சாய்பிரகாஷ் லியோமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.