கம்பம்: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து, தமிழகத்திற்கு வெளியேற்றப்படும் தண்ணீர் திங்கள்கிழமை நிறுத்தப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை மீண்டும் திறந்து விடப்பட்டது.
முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு அக்டோபர் 18-ம் தேதி வினாடிக்கு 1,755 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இந்த தண்ணீர் மூலம் லோயர் கேம்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் 4 மின்னாக்கிகள் மூலம் 154 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நடைபெற்றது.
இதற்கிடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தமபாளையத்தில், முல்லைப் பெரியாற்றில் குளித்த கல்லூரி மாணவர் சவரிமுத்து என்பவர் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டார்.
மாணவர் உடலை மீட்கும் பணிக்காக தேனி மாவட்ட ஆட்சியர், பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பதை நிறுத்த உத்தரவிட்டார்.
அதன்பேரில் ஞாயிற்றுக்கிழமை இரவு தண்ணீர் அடைக்கப்பட்டது, ஆனாலும் அணைக்கு வினாடிக்கு 1,339 கன அடி தண்ணீர் அணைக்குள் வந்தது.
மூன்றாவது நாளாக கல்லூரி மாணவர் உடல் கிடைக்காத நிலையில், பெரியாறு அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தால் தண்ணீரை அடைத்து வைக்க முடியாது என்று மாவட்ட ஆட்சியரிடம் அணைப்பகுதி பொறியாளர்கள் தெரிவித்தனர்.
பின்னர் திங்கள் கிழமை இரவு பெரியாறு அணையிலிருந்து, தண்ணீர் மீண்டும் திறக்கப்பட்டது. தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 1,755 கன அடி தண்ணீர் வரத்தொடங்கியது.
அதன் மூலம் லோயர் கேம்பில் உள்ள பெரியார் மின் உற்பத்தி நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மின் உற்பத்தி மீண்டும் இயங்கத் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி நான்கு மின்னாக்கிகள் மூலம், 154 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியும் தொடங்கியது.
அணை நிலவரம்
அணையின் நீர்மட்டம் 129.65 அடியாகவும், நீரின் கொள்ளளவு 4,622 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு வினாடிக்கு 1,143 கன அடி தண்ணீரும் வந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 1,755 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.