அந்தியூர் அருகே மாட்டுக் கொட்டகைக்குள் புகுந்த 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்கப்பட்டு, அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
அந்தியூர் வனச்சரகம், அத்தாணி கிழக்கு எல்லைக்குள்பட்ட நகலூர் கிராமம், முச்சாண்டபாரி தோட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (73). இவர் தனக்குச் சொந்தமான மாட்டுக் கொட்டகைக்கு திங்கள்கிழமை இரவு சென்றபோது, மலைப்பாம்பு சுருண்டு படுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, அந்தியூர் வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வனவர்கள் பிரவின்பாரதி, வை.ஸ்ரீதேவி, வனக்காப்பாளர்கள் ஈஸ்வரமூர்த்தி, ரகுநாதன், விஸ்வநாதன் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் கொண்ட குழுவினர் விரைந்து சென்றனர்.
அங்கு, மாட்டுக்கொட்டகையின் ஓரத்தில் சுருண்டு படுத்திருந்த சுமார் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பைப் பிடித்த வனத்துறையினர், அந்தியூர் வறட்டுப்பள்ளம் அணைப் பகுதியில் விடுவித்தனர்.