சென்னை: மருத்துவக் கல்வி இடஒதுக்கீடு விவகாரத்தில் விரைவில் ஆளுநர் நல்ல முடிவை அறிவிப்பார் என்று அவரை சந்தித்த பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் இன்னும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இது தொடர்பான வழக்கிலும், 'ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்வரை தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறாது' என தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து அமைச்சர்கள் இன்று வலியுறுத்தியுள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார், சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசினர்.
சந்திப்பு முடிந்த பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘7.5% உள்ஒதுக்கீடு விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார். மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தருவதாக ஆளுநர் எங்களிடம் உறுதியளித்துள்ளார் ‘ என்று தெரிவித்துள்ளார்.