வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் பேரிடர் மீட்பு குறித்த பயிற்சி திருச்சியில் காவல் துறையினருக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும், காவல் துறை கூடுதல் இயக்குநரகம் அறிவுறுத்தலின்படி காவல்துறை அதிதீவிர மீட்பு படை சார்பில் இப்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாகத் திருச்சி மாவட்டத்தில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மணிகண்டம் நீர் குட்டை பகுதியில் 60க்கும் மேற்பட்ட திருச்சி மாவட்ட காவல் துறையைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு இப்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
புயல், மற்றும் வெள்ள பேரிடர்களில் சிக்கிய பொதுமக்களை ஆபத்திலிருந்து மீட்பது குறித்தும், புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற ஆபத்தான காலங்களில், எவ்வாறு பாதுகாப்பு வழிமுறைகளைக் கையாள்வது என்பது குறித்தும், நவீன பாதுகாப்பு சாதனங்கள் குறித்தும் இதில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஒரு உதவி ஆய்வாளர் தலைமையிலான 5 பயிற்சி ஆசிரியர்கள் கொண்ட குழு காவலர்களுக்குப் பயிற்சி அளிக்கின்றனர். பயிற்சியின் போது வெள்ள காலத்தில் படகுகள் மூலம் எவ்வாறு பொது மக்களை மீட்பது, மற்றும் தண்ணீரில் தவித்துக்கொண்டிருக்கும் ஒருவரை எவ்வாறு நீச்சல் அடித்து அவரை காப்பாற்றுவது, கட்டடத்திலிருந்து அவர்களை எவ்வாறு கயிறு கட்டி மீட்பது, உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் காவலர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த பயிற்சிகள் 5 பிரிவுகளாக திங்கள்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இரண்டாம் நாளான செவ்வாய்க் கிழமை நடைபெற்ற பயிற்சியில், நீர் குட்டையில் பல்வேறு பயிற்சிகள் மேற்கொண்டனர். பயிற்சியின்போது காவலர்களுக்குத் தண்ணீரில் மூழ்காமல் மிதக்கும் வகையிலான பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டன.