மாணவியைக் கடத்திச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆத்தூர் நகர காவல்நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
சேலம் மாவட்டம், நரசிங்கபுரம், தெற்கு தில்லை நகர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகள், 12-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
கடந்த 17-ந்தேதி கடைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் இல்லாததால் ஆத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை ஆத்தூர் பேருந்து நிலையத்தில் காணாமல் போன மாணவியை காவலர்கள் மீட்டனர். விசாரணையில் மாணவியின் தாத்தா முறையான அதே பகுதியைச் சேர்ந்த வீரமுத்து மகன் பரமேஸ்வரன் (48)என்பவர் கடத்தி சென்றது தெரியவந்தது.
தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். ஆத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.