தமிழ்நாடு

மழைநீரை சேமிக்கும் தோனிமடுவு நீர்ப்பாசனத் நிறைவேற்ற வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

DIN

பவானி: பர்கூர் மலைப்பகுதியில் பெய்யும் மழைநீரை ஏரி, குளங்களில் சேமிப்பதன் மூலம் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள், பாசன வசதி பெறும் திட்டமான தோனிமடுவு நீர்சேமிப்புத் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் விவசாயத் தொழிலாளர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அடுத்துள்ள குருவரெட்டியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணனை நேரில் சந்தித்து, திராவிடர் கழக கழக மண்டலச் செயலாளர் பிரகலாதன் தலைமையில் கூட்டமைப்பு நிர்வாகிகள் சனிக்கிழமை விளக்கினர்.

பர்கூர், சென்னம்பட்டி மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் ஈரோடு மற்றும் சேலம் மாவட்ட எல்லையான தோனிமடுவு, கொளத்தூர், பாலாறு வழியாக மேட்டூர் அணையில் கலக்கிறது. இங்குள்ள பெரியதண்டா பகுதியில் தடுப்பணை கட்டி கால்வாய் மூலம் தண்ணீரை அந்தியூர், அம்மாப்பேட்டை, பவானி ஆகிய பகுதிகளில் ஏரி, குளங்களில் நிரப்பிட முடியும்.

குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், விவசாயத்தை காக்கவும் நிலத்தடி நீர்மட்டம் உயரவும் இத்திட்டம் பயன்படும். இதனால், சுமார் 67 ஏரிகள், 91 குளங்கள், 172 தடுப்பணைகளில் தண்ணீரைத் தேக்கலாம். இதன்மூலம், நிலத்தடி நீர்மட்டம் உயரும்போது 2,440 கிணறுகள், 3,548 ஆழ்குழாய் கிணறுகளுக்குத் தண்ணீர் கிடைக்கும். இத்திட்டத்தால், சுமார் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

எனவே, தோனிமடுவு பள்ளத்தில் வரும் தண்ணீரை தடுப்பணை கட்டி, ஏற்கெனவே உள்ள அகழி மூலமாக தண்ணீர் திருப்பி விவசாயிகள், பொதுமக்கள் நலன் காக்க முடியும் எனவும் இத்திட்டத்துக்கு, ரூ.140 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை நிறைவேற்ற தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

திட்ட மதிப்பீடு மற்றும் வரைபடங்களை பார்வையிட்ட அமைச்சர் கருப்பணன் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவானந்தம், ஊராட்சித் தலைவர்கள் அசோக்குமார் (குருவரெட்டியூர்), ஈஸ்வரமூர்த்தி (வெள்ளிதிருப்பூர்), அய்யாத்துறை (கன்னப்பள்ளி) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணலூா் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

"தேர்தலில் தன்னைத் தோற்கடிப்பதற்காக திமுகவும் அதிமுகவும் மறைமுகமாக கைகோத்துள்ளன என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது சரியா' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சித்ரா பெளா்ணமி சிறப்பு பூஜை

கரூா் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

வேளாண்துறையிலும் செயற்கை நுண்ணறிவு!

SCROLL FOR NEXT