ஈரோட்டில் ரூ.72.20 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகளை எம்எல்ஏ.,க்கள் துவக்கி வைத்தனர்.
ஈரோடு மாநகராட்சி முனிசிபல் காலணி 24வது வார்டு பகுதியில் கிழக்கு சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் 3 அங்கன்வாடி மையம் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ தென்னரசு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மேற்கு தொகுதி எம்எல்ஏ ராமலிங்கம் கலந்து கொண்டு பணிகளைப் பூமி பூஜையுடன் துவக்கி வைத்தார்.
இதேபோல், விவிசிஆர் நகர், கிருஷ்ணமூர்த்தி தோட்டம் 55,56,57வது வார்டு பகுதிகளில் மாநகராட்சி திட்டப்பணிகளால் சிதலமடைந்த சாலைகளை செப்பனிடும் பணிகளுக்காக ரூ. 48.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த பணிகளையும் எம்எல்ஏ.,க்கள் நேற்று பூமி பூஜையுடன் நேற்று துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், உதவி கமிஷனர் விஜயகுமார், முன்னாள் துணை மேயர் பழனிச்சாமி, பகுதி செயலாளர்கள் கேசவமூர்த்தி, ஜெகதீசன், தங்கமுத்து, ஒன்றிய செயலாளர் பூவேந்தன், ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் வீரக்குமார், மாணவர் அணி இணை செயலாளர் நந்தகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.