சென்னை: சென்னை விமான நிலையத்தில் கடந்த இரு நாட்களில் மட்டும் ரூ 1.48 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை விமான நிலைய சுங்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
புதன்கிழமையன்று துபையிலிருந்து சென்னை வந்த ஏழு பயணிகளை சோதனை செய்த போது அவர்கள் ஆசனவாயில் தங்கத்தை பசை வடிவில் சிறு மூட்டைகளில் மறைத்து வைத்துள்ளதையும், சில தங்க நகைகளை தங்களது உடையில் மறைத்து வைத்துள்ளதையும் ஒப்புக் கொண்டனர்.
பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஒட்டுமொத்த தங்கத்தின் அளவு 1.43 கிலோகிராம் மற்றும் அதன் சந்தை மதிப்பு ரூ.75.50 லட்சமாகும்.
முன்னதாக செவ்வாய் இரவு துபாயிலிருந்து ஏழு பயணிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர்கள் ஆசனவாயில் தங்கத்தை பசை வடிவில் மறைத்து வைத்துள்ள ஒன்பது சிறு மூட்டைகள் கைப்பற்றபட்டன.
அவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஒட்டுமொத்த தங்கத்தின் அளவு 1.39 கிலோகிராம் மற்றும் அதன் சந்தை மதிப்பு ரூ.72.51 லட்சமாகும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.