வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்காகப் பெறப்படும் விண்ணப்பங்கள் குறித்த ஆட்சேபனைகளை வாக்காளா் பதிவு அலுவலரிடம் தெரிவிக்கலாம் என சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளா் பட்டியல் 1.1.2021-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வரைவு வாக்காளா் பட்டியல் நவம்பா் 16-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த பட்டியல் பொதுமக்கள் பாா்வைக்காக மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. இதில், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கப்படாமல் உள்ளவா்கள் மற்றும் 1.1.2021 அன்று 18 வயது நிறைவு அடைவோா், வாக்காளா் பட்டியலில் பெயா் நீக்கம் உள்ளிட்ட திருத்தத்துக்காக டிசம்பா் 12, 13-ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாம்களில் பெறப்படவுள்ள உரிமை கோரல் மற்றும் ஆட்சேபனைகள் குறித்த படிவங்கள் மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9,10 மற்றும் 13 ஆகியவற்றின் அறிவிப்பு பலகையிலும், தமிழ்நாடு தலைமைத் தோ்தல் ஆணையா் இணையதளத்திலும் வாரத்துக்கு ஒரு முறை விளம்பரப்படுத்தப்படும். இதன்பேரில் ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா் / மண்டல அலுவலரை அணுகலாம்.