சேலம்: சேலத்தில் வெவ்வேறு சம்பவங்களில் கிராம நிர்வாக அலுவலர் உள்பட இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
சேலம் மாவட்டம் பேளூர் அருகில் உள்ள புழுதிகுட்டை கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்தவர் சரவணன்(42). இவர் சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் வசித்து வந்தார். குடும்ப தகராறு காரணமாக சனிக்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது.
இதுகுறித்து கன்னங்குறிச்சி காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள மரத்தில் சுமார் 60 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார், எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து அஸ்தம்பட்டி காவலர்கள் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.