நாமக்கல்: வேகக்கட்டுப்பாட்டு கருவி, ஒளிரும் வில்லை, ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றை கட்டாயப்படுத்தும் அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (நவ.30) அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஆர். குமாரசுவாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேகக் கட்டுப்பாட்டு கருவியை குறிப்பிட்ட நிறுவனத்தில் வாங்குமாறு தமிழக அரசு வற்புறுத்தி வருகிறது. ஆனால் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எந்த நிறுவனத்திலும் வேகக் கட்டுப்பாட்டு கருவியை வாங்கிக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
இதேபோல் வாகனங்களில் ஒட்டப்படும் ஒளிரும் வில்லையையும்(ஸ்டிக்கர்) பெங்களூருவைச் சேர்ந்த இரு நிறுவனங்களிடம் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில் அதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் கருவி ஏற்கனவே லாரிகளில் பொருத்தப்பட்டுள்ள நிலையில் குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களிடம் வாங்கி பொருத்துமாறு வலியுறுத்துகின்றனர். இவை மூன்றும் குறிப்பிட்ட நிறுவனங்களை சார்ந்ததாக இருந்தால் மட்டுமே வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகன புதுப்பிப்பு (எப்.சி.) சான்றிதழ் வழங்க அதிகாரிகள் முன்வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லாரி உரிமையாளர்கள் திரளாக சென்று மனு அளிக்க உள்ளனர். மற்றபடி லாரிகளை கொண்டு செல்வதோ, ஆர்ப்பாட்டம், மறியல் போன்றவையோ இடம் பெறாது.
இந்தப் போராட்டத்திற்கு பின் தமிழக அரசு லாரி உரிமையாளர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என நம்புகிறோம் என்று குமாரசுவாமி கூறினார்.