காஞ்சிபுரம் அருகே உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள 27 நட்சத்திரங்களுக்கான கோயில் வளாகத்தில் அருள்பாலித்து வரும் 1008 ருத்ராட்ச சிவலிங்கத்துக்கு வரும் டிசம்பர் 4-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் உக்கம்பெரும்பாக்கத்தில் உள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அசுவினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களின் அதிதேவதைகளுக்கும் தனித்தனியாகக் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அத்திமரத்தினாலும்,1008 ருத்ராட்சங்களாலும் செய்யப்பட்ட சிவலிங்கத்தை வழங்கியிருந்தார்.
தற்போது இச்சிவலிங்கத்துக்கெனவும், இக்கோயில் வளாகத்துக்குள்ளேயே அமைந்துள்ள வள்ளி, தெய்வானை சமேத சிவ சுப்பிரமணிய சுவாமிக்கும் திருக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான கும்பாபிஷேகம் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது. மகா கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை அத்திருக்கோயிலின் தலைவர் வி.சுவாமி நாதய்யர் தலைமையிலான விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.