ஸ்ரீவில்லிபுத்தூர்: கெளசிக ஏகாதேசியை முன்னிட்டு ஆண்டாள் ரெங்கமன்னார், பெரிய பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி, கருடாழ்வார், மற்றும் ஆழ்வார்களுக்கு 108 பட்டுப்புடவைகள் அணிவிக்கும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் கெளசிக ஏகாதேசி முன்னிட்டு ஆண்டாள் ரெங்கமன்னார், பெரிய பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி, கருடாழ்வார், மற்றும் ஆழ்வார்களுக்கு 108 பட்டுப்புடவைகள் போதும் வைபவ நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் வியாழக்கிழமை கவுசிக ஏகாதேசி என்பதால் இரவு முதல் விடிய விடிய தெய்வங்களுக்கு 108 பட்டுப்புடவை அணிவிக்கும் வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது
இதற்காக வியாழக்கிழமை இரவு ஆண்டாள் ரங்கமன்னார் கருடாழ்வார் ஆகியோர் மேளதாளங்கள் முழங்க கோவிலில் இருந்து ஆண்டாள் கோவில் வளாகத்தில் உள்ள பெரிய பெருமாள் சன்னதி பகல்பத்து மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டனர். பின்னர் இரவு ஆண்டாள் ரங்கமன்னார் கருடாழ்வார் பெரியபெருமாள் பூமாதேவி ஸ்ரீதேவி ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து இரவு 12 மணி முதல் பகல்பத்து மண்டபத்தில் வைத்து 108 பட்டுப் புடவைகள் அணிவிக்கும் வைபவ நிகழ்ச்சி துவங்கியது. வைபவ நிகழ்ச்சியில் கௌசிக புராணத்தை வேத பிரான் பட்டர் சுதர்சன் படித்தார்.
இதுகுறித்து ஆண்டாள் கோவில் பட்டர் ஒருவர் கூறும்போது, குளிர்காலம் துவங்கியதை அறிவிக்கும் வகையில் கௌசிக ஏகாதசி தினமான இரவு தெய்வங்களுக்கு 108 பட்டுப் புடவைகள் அணிவிக்கப்பட்டது. வியாழக்கிழமை இரவு 12 மணிக்கு துவங்கிய இந்த நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது என அவர் தெரிவித்தார்
தெய்வங்களுக்கு 108 பட்டுப்புடவை அணிவிக்கும், வைபவ நிகழ்ச்சியை முன்னிட்டு ஆண்டாள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் தக்கார் ரவிச்சந்திரன் நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோவில் பணியாளர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
ஆண்டாள் ரங்கமன்னார் கருடாழ்வார்,பெரிய பெருமாள்,பூமாதேவி, ஸ்ரீதேவி,ஆகியோருக்கு 108 பட்டுபுடவை அணிவிக்கப்பட்டு காட்சி அளித்ததை இரவு நேரத்திலும் சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.