வாக்குச்சாவடி முகவர்கள் போர் வீரர்கள் போல செயல்பட வேண்டும் என்று சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ராஜேந்திரன் கூறினார்.
சேலம் மத்திய மாவட்டம் ஓமலூர் தொகுதி கிழக்கு மற்றும் வடக்கு ஒன்றியத்திற்கு உள்பட்ட ஊராட்சிகளில் உள்ள வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் ஓமலூரில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.ராஜேந்திரன் பேசியதவாது:
வாக்குச்சாவடி முகவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட பணியை மிகுந்த கவனத்துடன், சிரத்தையாக செய்ய வேண்டும். போர் வீரர்கள் போல மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் இறந்த வாக்காளர்களை நீக்கும் பணிகளை சரியாக மேற்கொள்ள வேண்டும்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தல் மிக முக்கியமான தேர்தலாகும். இதில் பதிவாகும் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை உணர்ந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். வாக்குச்சாவடி பட்டியலை எடுத்துக்கொண்டு வீடு வீடாக சென்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன்,மாவட்ட பொருளாளர் ஜி.கே.சுபாஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் சி.ராஜேந்திரன், தீர்மானக் குழு உறுப்பினர் கு.சீ.வெ.தாமரைக்கண்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், பாலசுப்ரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.