மழைக்காலம் முடியும் வரை மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
நாகை மாவட்டம் திருக்குவளை தாலுகாவிற்கு உள்பட்ட கொளப்பாடு, பாங்கல்,பனங்காடி, கச்சநகரம், சித்தாய்மூர், கொத்தங்குடி ஆகிய ஊராட்சிகளில் மழை பாதிப்பு குறித்து பார்வையிட்ட தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நிவர் புயல் பாதிப்பிலிருந்து டெல்டாப் பகுதி மக்கள் தற்போது தப்பித்து கொண்ட நிலையில் மழைக்காலம் முடியும் வரை பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
அதிலும் குறிப்பாக தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கண்டிப்பாக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் எனவும், புயல் பாதுகாப்பு கட்டடங்கள் இல்லாத பகுதிகளில் விரைவில் அவை ஏற்படுத்தி தருவதற்கான முயற்சிகள் செய்யப்படும்.
மேலும் அரசு சார்பில் கனமழை மற்றும் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பயிர் காப்பீடு பதிவு செய்வதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்படுமா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, அது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும், ஏற்கனவே அரசு சார்பில் அறிவித்திருந்தபடி நவம்பர் 30 வரை விவசாயிகள் பயிர் காப்பீடு பதிவு செய்ய வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார்.
அதனைத்லதொடர்ந்து கொத்தங்குடி கிராமத்தில் வசிக்கும் வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரது வீடு மழையின் காரணமாக சேதமடைந்த நிலையில் அவரின் வீட்டை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் வீட்டின் உரிமையாளருக்கு நிவாரணம் வழங்கினார்.
இந்நிகழ்வில் தலைஞாயிறு மேற்கு ஒன்றிய செயலாளர் தங்க சௌரிராஜன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர்களான கே.காளிதாஸ், எஸ்.என். தமிழ்வாணன், தலைஞாயிறு ஒன்றிய மாவட்ட கவுன்சிலர் இளவரசி தங்கராசு, தலைஞாயிறு ஒன்றிய துணை பெருந்தலைவர் ஆர். ஜெகதீஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் எம்.ஏ.கே. சுபாஷ் சந்திரபோஸ்,கொளப்பாடு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலாஜி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்களான கொத்தங்குடி மகாரவி, பாங்கல் கோவிந்தராஜ், தலைஞாயிறு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.